Friday 6 April 2012

ஆணிகள்

ஆணி அடிக்கிறார்
என் வீட்டின் மேல் மாடியில் குடியிருக்கும்
அண்ணாசாமி


சாமி படம் மாட்ட
சாவிக் கொத்துத் தொங்கவிட
அதற்கு இதற்கெனக்
காரணங்கள் ஆயிரம்
தீர்ந்த பிறகும்
ஆணி அடிக்கிறார்.



சிலுவையில் ஏசுவாய்ச்
சித்திரவதைப்படும்
எங்கள் பகல்கள்.
உச்சிமுதல்
உள்ளங்கால்வரை
காயங்களால் துடிக்கும்
எங்கள் இரவுகள்.


காதுகளின் வேர்களிலிருந்து
கழற்றி எடுக்க முடியாமல்
வேதனை ஆணிகளோடு
வெளியேறுகின்றனர்
விருந்தாளிகள்.


கூரை மார்பு
அதிர்கிறது.
சுவர்களை வீறல்கள் வந்து வந்து
விசாரிக்கின்றன.


கூர்மைகள் 
வெறி நாய்கள் போல் பாய்ந்து
குதறுகின்றன அமைதியை


பிள்ளைகள்
படிப்புக்குள் ஆழமாய்
இறங்குகின்றன ஆணிகள்...


வயதானவர்கள்
சுவாசப் பைக்குள் பாய்ந்து
மரணத் தவணைகளாய்
ஆணிகள்...


கருச்சிதைத்து
என் கவிதைக்குள் அலறலாய்
ஆணிகள்


அண்ணாசாமி கைவசம்
ஆணிகள் இல்லாத்
தருணங்கள் மீதும்
அடிக்கிறார்
அடிக்கிறார்
ஆணிகள்

------------------------ பனி பெய்யும் பகல் 

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...